டெல்லியில் பிப்.1 முதல் புத்தக திருவிழா: கல்லூரிகளுக்கு யுஜிசி அழைப்பு

டெல்லியில் பிப்.1 முதல் புத்தக திருவிழா: கல்லூரிகளுக்கு யுஜிசி அழைப்பு
Updated on
1 min read

சென்னை: மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் டெல்லியில் நடைபெறவுள்ள புத்தக காட்சியில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: அறிவார்ந்த சமுதாயத்தை கட்டமைக்க வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பது அவசியமாகும்.

இதை கருத்தில்கொண்டு மத்திய கல்வி அமைச்சகம், தேசிய புத்தக அறக்கட்டளையுடன் இணைந்து மாபெரும் புத்தகக் காட்சியை டெல்லி பிரகதி மைதானத்தில் பிப்ரவரி 1 முதல் 9-ம் தேதி வரை நடத்தவுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் பல்வேறு சிறப்பு கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

இலக்கிய நிகழ்வுகள்: இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர். அத்துடன், புத்தக வர்த்தகம் தொடர்பான சந்திப்புகளும், இலக்கிய நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

எனவே, நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், நூலகர்கள், எழுத்தாளர்களை இந்த திருவிழாவில் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் அறிவுத் திறனையும், அரிய தகவல்களையும் ஒருவருக்கொருவர் பகிருவதற்கான வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in