

சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் இருந்து ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்குப் பருவமழை ஓரிரு நாட்களில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளிலிருந்து விலக வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தென் தமிழகத்தில் வரும் 29-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 30, 31-ம் தேதிகளில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 30-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், வரும் 31-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.