

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்தில் அவர்களது உருவச்சிலை நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:1938-ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் அப்போதைய முதல்வர் ராஜாஜி, ‘தமிழக மாணவர்கள் இனி கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என்று அறிவித்தார். இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகள், திரு.வி.க. நாவலர் சோமசுந்தர பாரதி, அண்ணா போன்ற தமிழ் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் தாய்மொழி காக்க களம் கண்டனர்.
அப்போது, 14 வயதே ஆன பள்ளி மாணவர் கருணாநிதி, திருவாரூர் வீதியில் இந்தி திணிப்பை எதிர்க்க முன்வந்தார்.முதல்கட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற நடராசன் 1939 ஜனவரி 15-ம் தேதியும், தாளமுத்து மார்ச் 11-ம் தேதியும் மறைந்தனர்.
மக்களின் தொடர் போராட்டத்தால், அரசு 1940 பிப்ரவரி 21-ம் தேதி கட்டாய இந்தி திணிப்பை கைவிடும் முடிவுக்கு வந்தது. கீழப்பழுவூர் சின்னச்சாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன். கோடம்பாக்கம் சிவலிங்கம், மயிலாடுதுறை சாரங்கபாணி. விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, பீளமேடு தண்டபாணி, சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் ஆகியோர் தீக்குளித்தனர். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரின் தீரம் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி நினைவுகூரப்படுகிறது.
தாளமுத்து - நடராசன் ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையில், சென்னை மூலக்கொத்தளத்தில் பெரியார் திறந்து வைத்த நினைவிடம் தற்போது ரூ.34 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினமான நேற்று இதை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தாளமுத்து - நடராசன் மற்றும் மொழிப்போர் தியாகி, சமூகப் போராளி டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அம்மையார் ஆகியோரது உருவப் படங்களுக்குமலர் தூவியும், அவர்களது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் முதல்வர் மரியாதை செலுத்தினார்.
சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்தில் அவர்களது உருவச் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தலைவர்கள் அஞ்சலி: சென்னை கிண்டி, காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தாளமுத்து - நடராசன் உருவபடங்களுக்கு தமிழக அரசு சார்பில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
அதையடுத்து மூலக்கொத்தளம் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகதலைவர் விஜய், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் மொழிப்போர் தியாகிகளுக்கு புகழாரம் சூட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.