டங்ஸ்டன் ஏல ரத்து அறிவிப்பை தொடர்ந்து மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா

டங்ஸ்டன் ஏல ரத்து அறிவிப்பை தொடர்ந்து மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா
Updated on
1 min read

சென்னை: டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.

மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி அரிட்டாபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும், டங்ஸ்டன் ஆலைக்கான ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அப்போது பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது என்று அறிவித்தார்.

இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக சில நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், அரிட்டாபட்டியைச் சேர்ந்த போராட்டக் குழுவினர் 32 பேர், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான முதல்வரின் நடவடிக்கைகளுக்கு நன்றி மற்றும் பாராட்டுத் தெரிவிப்பதற்காக விழா எடுப்பதாகக் கூறி, அழைப்பிதழை வழங்கினர்.

இதுகுறித்து டங்க்ஸ்டன் போராட்டக் குழுவை சேர்ந்த பழனியாண்டி கூறும்போது, "மத்திய அரசு கொண்டுவந்த டங்ஸ்டன் திட்டத்தால் எங்கள் பகுதியே பாலைவானம் ஆகிவிடும் என்பதை உணர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோம். இது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றியதுடன், ‘நான் முதல்வராக இருக்கும் வரை திட்டம் வர விட மாட்டேன்’ என்று முதல்வர் உறுதியளித்தார். இதற்குப் பிறகே இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். ஜன. 26-ம் தேதி (இன்று) அரிட்டாபட்டிக்கு முதல்வர் வருகிறார். சென்னையில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற பின்னர், மதுரை வரும் முதல்வர், அரிட்டாபட்டியில் நடைபெறும் நன்றி தெரிவித்தல் மற்றும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in