Published : 25 Jan 2025 07:14 AM
Last Updated : 25 Jan 2025 07:14 AM
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின்கணக்கீட்டு முறை அமல்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் நடந்த அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். இதில் வரும் கோடைகாலத்தில் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்கு தேவையான மின்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக இதுவரை 48 துணை மின்நிலையங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன. 20 புதிய துணை மின்நிலையங்கள் நிறுவும் பணிகள் நடக்கின்றன. மேலும் தமிழகம் முழுவதும், இயக்கத்தில் உள்ள 260 திறன் மின்மாற்றிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளன, 22 திறன் மின்மாற்றிகளின் தரம் உயர்த்தப்படவுள்ளது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
மேலும், அதிகரித்து வரும் மின்தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக அமைக்க வேண்டிய புதிய துணை மின்நிலையங்கள் மற்றும் திறன் மின்மாற்றிகள் குறித்தும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளின் நிறுவப்பட உள்ள துணை மின்நிலையங்கள் குறித்தும் அமைச்சர் விளக்கினார். மேலும் துணை மின்நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகளை பராமரிக்கவும், மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் நுகர்வோரிடமிருந்து வரும் புகார்களை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மின்வாரிய தலைவர் க.நந்தகுமார், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், மின்தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநர் கே.இந்திராணி, இயக்குநர் (பகிர்மானம்) அ.ரா.மாஸ்கர்னஸ், மின்பகிர்மானக் கழக இயக்குநர் கே.மலர்விழி மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, எங்கெல்லாம் மின்விநியோகத்தில் இடையூறு உள்ளதோ அங்கெல்லாம் புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, 6,536 புதிய மின்மாற்றிகள் மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு 5,407 மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் 1,129 மின்மாற்றிகள் அமைக்கப்பட உள்ளன. புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் புதிய மின்இணைப்புகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோடைகாலத்தில் உச்ச மின்தேவை 20,830 மெகாவாட் அளவாக இருந்தது. இந்த ஆண்டு 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உச்சபட்ச தேவை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டு, விரைவில் புதிய டெண்டர் விடப்படும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின்கணக்கீட்டு முறை அமல்படுத்தப்படும். புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியை அதிகரிக்கும் வகையில், நீரேற்று மின்சாரம் மூலம், 14,500 மெகாவாட் கண்டறியப்பட்டு அதை உற்பத்தி செய்வதற்கான டெண்டர் விரைவில் விடப்படும்.
அதேபோல், பேட்டரி ஸ்டோரேஜ் மூலம் சூரியசக்தி மின்சாரம் 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு, அதில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஓரிரு வாரங்களில் டெண்டர் விடப்படும். சூரியசக்தி பூங்கா அமைப்பதற்கான தொடக்க பணிகள் முடிந்து அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளவும் விரைவில் டெண்டர் விடப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT