Published : 25 Jan 2025 03:10 AM
Last Updated : 25 Jan 2025 03:10 AM
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கொடைக்கானலில் 9 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 29, 30-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஜன. 24-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவுகளின்படி மலைப் பிரதேசமான கொடைக்கானலில் 9 டிகிரி, குன்னூரில் 11 டிகிரி, உதகையில் 11.8 டிகிரி, வால்பாறையில் 15 டிகிரி செல்சியல், நிலப் பகுதிகளான கரூர் பரமத்தியில் 16 டிகிரி, சேலத்தில் 18.4 டிகிரி, தருமபுரி, வேலூரில் 19.1 டிகிரி, திருத்தணியில் 19.5 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT