

தமிழகத்தில் வரும் 28, 29-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜன.24) முதல் வரும் 27-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 28, 29-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஜன. 23-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து மற்றும் நாலுமுக்கு பகுதிகளில் தலா 6 செ.மீ., காக்காச்சியில் 5 செ.மீ., மாஞ்சோலையில் 4 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை அளவுகளின்படி மலைப் பிரதேசங்களில் கொடைக்கானலில் 9.5 டிகிரி, உதகை, குன்னூரில் 11.6 டிகிரி, வால்பாறையில் 16.5 டிகிரி செல்சியஸ், நிலப் பகுதிகளான கரூர் பரமத்தியில் 18 டிகிரி, திருத்தணியில் 19.5 டிகிரி, சேலத்தில் 19.7 டிகிரி, வேலூரில் 20 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.