Published : 23 Jan 2025 06:15 AM
Last Updated : 23 Jan 2025 06:15 AM

கடல் ஆமை இறப்​புக்கான காரணம் உடற்​கூராய்​வுக்​கு பிறகே தெரியும்: பசுமை தீர்ப்​பா​யத்​தில் அரசு விளக்கம்

சென்னை: கடல் ஆமை இறப்புக்கான காரணம் உடற்கூராய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவொற்றியூர் முதல் கோவளம் வரை கடற்கரையோரங்களில் கடந்த வாரம் ஏராளமான கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இவற்றின் திடீர் இறப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆமைகள் இறப்பு தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. கடந்த திங்களன்று நடைபெற்ற விசாரணையில், ஆமைகள் இறப்புக்கான காரணம் குறித்து தமிழக அரசு பதிலளளிக்க அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

2 நாள் அவகாசம் கேட்பு: அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, "உயிரிழந்த ஆமைகளின் உடல்கள் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தபின்னரே ஆமைகளின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். அதனால், அறிக்கை தாக்கல் செய்ய 2 நாள் அவகாசம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஆமைகள் உயிரிழப்பு விவகாரத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x