Published : 23 Jan 2025 06:04 AM
Last Updated : 23 Jan 2025 06:04 AM

கிண்டி கிங் இன்ஸ்​டிடியூட்டுக்கு தமிழக அரசு ரூ.12 கோடி நிதி

சென்னை: சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டுக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தில் தமிழக அரசின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் சென்னை கிண்டியில் நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம் (கிங் இன்ஸ்டிடியூட்) செயல்பட்டு வருகிறது.

இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கு நவீன வகை கருவிகளுடன் மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டுக்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கிண்டி நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மருந்துகள் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம் இருந்து ஊசி மூலம் செலுத்தப்படும் அனைத்து மருந்து மாதிரிகள் வாடிக்கையாகவும் இடை சோதனைக்காகவும் பெறப்பட்டு பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

மருந்து சார்ந்த பாதுகாப்பு கண்காணிப்பு, இந்திய ரத்த கண்காணிப்பு திட்டம் போன்ற திட்டங்களின் மருந்து சார்ந்த தீய விளைவுகள் மற்றும் புகார்கள் தன்மை கண்டறிதலும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மருந்துகள் தர கட்டுப்பாடு நவீன ஆய்வகத்தில் மருந்துகளின் தரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனால், ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பொதுமக்கள் முக்கியமாக பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் பல இணை நோய்களால் பாதிக்கப்பட்டோர் பயன்பாட்டுக்கு பாதுகாப்பான தரமிக்க மருந்துகள் மட்டுமே சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x