

சென்னை: வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமானுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரிய மனுவுக்கு கஞ்சனூர் போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை அவமதிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாக கஞ்சனூர் போலீஸில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் பேரில் சீமானுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் சீமான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக நடந்தது.
அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், அவரது பேச்சு வன்முறையை தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் சீமானுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
அதையேற்க மறுத்த நீதிபதி, பிடிவாரண்டை திரும்பப் பெறக் கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தி்ல் தான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது எனவும் மறுப்பு தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்.6-க்கு தள்ளி வைத்துள்ளார்.