

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு நேற்று முன் தினம்நள்ளிரவு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 46-ஆக குறைந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு பிப்.5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 58 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 8 வேட்பாளர்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதையடுத்து, திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 47 பேர் போட்டியிட உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் நேற்று முன் தினம் மாலை தெரிவித்தார்.
தொடர்ந்து, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடந்தது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு உதயசூரியன், நாதக வேட்பாளர் சீதாலட்சுமிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடந்தது.
அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த வி.பத்மாவதி என்ற சுயேச்சை வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டதற்கு, சுயேச்சை வேட்பாளர்கள் நூர் முகமது, அக்னி ஆழ்வார், பத்மராஜன் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, மக்களவை, மாநிலங்களவைக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் போட்டியிடலாம். ஆனால், சட்டப்பேரவைத் தொகுதிக்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் மட்டுமே போட்டியிட முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து, ஆலோசனை நடத்தினார். மேலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருடனும் ஆலோசனை நடத்தினார்.
நள்ளிரவு வரை வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், சுயேச்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் 46 பேரின் விவரங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டன.
அமைச்சர் விளக்கம்: ஈரோட்டில் நேற்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் முத்துசாமி, “நாம் தமிழர் கட்சிப் பிரச்சாரத்தில் தலையிடுவதோ, தடுப்பதோ எங்கள் நோக்கமில்லை. இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறது. எனவே, எங்கள் மீது யாரும் குறை கூறக்கூடாது. பிரச்சாரத்தின்போது ஆரத்தி எடுப்பதற்கோ அல்லது வாக்களிப்பதற்கோ பணம் கொடுப்பது தவறு. திமுகவினர் இவற்றை செய்யக்கூடாது என்று
வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.
திமுகவில் இணைந்த சுயேச்சை: இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்த நிலையில், ஈரோடு மாநகர எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் செந்தில் முருகன் சுயேச்சையாக மனு தாக்கல் செய்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, நேற்று முன்தினம் வேட்புமனுவைத் திரும்பப் பெற்ற அவர், நேற்று காலை அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுக வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார்.