ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி திமுக சாதனை படைக்கும்: இபிஎஸ் விமர்சனம்
சேலம்: திமுக ஆட்சி முடிவதற்குள் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி சாதனை படைத்து விடுவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நிதி மேலாண்மையில் எனக்கு புரிதல் இல்லை என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். தற்போதைய திமுக ஆட்சியில் ரூ.3 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன் வாங்கி, இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் என்ற சாதனையைப் புரிந்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் பெட்ரோல், மதுபானம் மூலம் ரூ.43,489 கோடி வருவாய் வந்த நிலையில், திமுக ஆட்சியில் ரூ.69,588 கோடியாக அதிகரித்துள்ளது. அதே போல, ஜிஎஸ்டி மூலம் ரூ.73,788 கோடி, முத்திரைத்தாள் விற்பனையில் ரூ.23,370 கோடியும், கலால் வரியில் ரூ.12,247 கோடி, வாகன வரியில் ரூ.11,560 கோடி என திமுக ஆட்சியில் அதிக வருவாய் கிடைத்துள்ளது. அதாவது ரூ.86,064 கோடி வருவாய் அதிகம் கிடைத்திருக்கிறது.
மத்திய அரசின் வரிப்பகிர்வில் அதிமுக ஆட்சியில் ரூ.24,925 கோடி கிடைத்த நிலையில், திமுக ஆட்சியில் ரூ.49,755 கோடி கிடைத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியை விட ரூ.1 லட்சத்து 10,894 கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது. ஆனாலும், ரூ.3,53,392 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி முடிவதற்குள் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி சாதனை படைத்து விடுவார்கள். இவ்வளவு வருவாய் இருந்தும், திமுக எதையும் செய்யவில்லை. கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும் கடன் குறையவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையால் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். திருச்செந்தூர் பக்தர்களை அமைச்சர் விமர்சித்துப் பேசியது கண்டனத்துக்குரியது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாற்றப்பட்டால், கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறீர்கள். நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். எனவே, கூட்டணி குறித்து கேட்கத் தேவையில்லை. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி முடிவாகும். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் யாருக்குச் செல்லும் என்பது ரகசியமானது, இதுகுறித்து யாரும் பகிரங்கமாக கருத்து கூறக்கூடாது. இவ்வாறு பழனிசாமி கூறினார்.
