Published : 20 Jan 2025 06:04 AM
Last Updated : 20 Jan 2025 06:04 AM
சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்படும் ரயில் நிலையத்தை வரும் மே மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலமாக, தென் மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகளில் வந்து இறங்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் ரயில் போக்குவரத்து வசதியை பூர்த்தி செய்யமுடியும்.
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் 88 ஏக்கரில் பரப்பளவில் ரூ.393.71 கோடியில் கட்டி திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் 80 சதவீத அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
ஆனால், இங்கு புறநகர் ரயில் நிலையம் இல்லாததால், இணைப்பு மின்சார ரயில் சேவை இல்லாமல் இருக்கின்றன. இதனால், பேருந்து நிலையம் வந்து செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையில் அடிப்படையில், வண்டலுார் ரயில் நிலையத்தை அடுத்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜன. 2-ம் தேதி தொடங்கியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைகிறது.
பணிகள் தொடங்கி நடந்தாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் முடிக்க திட்டப்பட்டது. திட்டமிட்ட காலம் முடிந்து, பல மாதங்கள் ஆகிவிட்டன. இதுதவிர, மழைநீர் கால்வாய் பணி காரணமாக, மேலும் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரும் மே மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 3 நடைமேடைகள் இடம்பெற உள்ளன. இந்த நிலையத்தில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை நிறுத்த முடியும். தற்போது, ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு மே மாதத்தில் பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரயில் நிலையம், தென் மாவட்டங்களிலிருந்து நீண்ட தூர பேருந்துகளில் கிளாம்பாக்கத்தை பயணிகள் அடைகிறார்கள். அங்கிருந்து அவர்கள் எளிதாக நகருக்குள் செல்ல மின்சார ரயில்கள் உதவியாக இருக்கும்.
தற்போது, கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையை அடைய, பயணிகள் மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். அல்லது வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு ஆட்டோகளில் சென்று அங்கிருந்து மின்சார ரயிலைப் பிடிக்க வேண்டும். இதற்காக, பயணிகள் அதிகக் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT