

ஈரோடு/சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தின்போது, பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி அமைச்சர் முத்துசாமியை வாக்காளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமி தலைமையிலான திமுகவினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதன்படி, அன்னை சத்யா நகரில் நேற்று காலை வேட்பாளர் சந்திரகுமாருடன், அமைச்சர் முத்துசாமி பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது, “ஆக்கிரமிப்பு என்று கூறி எங்கள் வீட்டை இடித்தது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தோம். யாரும் வந்து பார்க்கவில்லை. இப்போது வாக்கு கேட்டு வந்தால், எப்படி வரவேற்போம்” என்று ஒருவர் கேள்வி எழுப்ப, அமைச்சர் முத்துசாமி அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல, அப்பகுதியினர், தங்களுக்கென கட்டப்பட்ட மாற்று குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் உள்ள குளறுபடிகளைத் தெரிவித்தும், அடிப்படை வசதிகள் கோரியும் அமைச்சரை முற்றுகையிட்டனர்.
2011 தேர்தலில் தேமுதிக சார்பில் சந்திரகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு ஒரு பெண், “கடந்த முறை வெற்றி பெற்றபோது நன்றி சொல்லக்கூடவரவில்லை. இந்த முறையாவது வெற்றி பெற்றால் தொகுதிப் பக்கம் வாருங்கள்’ என்றார்.
தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி வாக்காளர்களிடம் பேசும்போது, “சத்யா நகர் பகுதி மக்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு, அடிப்படை வசதிகள், பட்டா, மகளிர் உரிமைத்தொகை போன்ற பிரச்சினைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு: ஈரோட்டில் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “வாக்காளர்களைச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள எனக்கு அனுமதி மறுக்கின்றனர். ஒலிபெருக்கி பயன்படுத்தவும், வாகனப் பிரச்சாரத்துக்கும் காவல் துறை அனுமதி அளிப்பதில்லை. தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கும் வகையில் வழக்குகளை பதிவு செய்து மிரட்டுகின்றனர். இதுகுறித்து தேர்தல் பார்வையாளரிடம் மனு அளிப்போம்” என்றார்.
அதிமுக நிர்வாகி நீக்கம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளராக இருந்த பி.செந்தில்குமார், அதிமுகவின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியும், தலைமை எடுத்த முடிவுக்கு மாறாகவும் ஈரோட்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்
டாகும் விதத்தில் செயல்பட்டுள்ளார். எனவே, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.