

விருதுநகர்: நிதி மேலாண்மையில் நுட்பமாக செயல்படுகிறோம். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பொது வெளியில் குற்றம் சாட்டுவதை தவிர்க்க வேண்டும் என நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.
இதுகுறித்து விருதுநகர் அருகே மல்லாங்கிணறு பகுதியில் உள்ள இல்லத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜன.19) அளித்த பேட்டியில், “எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து முற்றிலும் தவறான தகவல்களைக் கூறியுள்ளார். பரப்புக்காக தமிழ்நாட்டின் நிதி நிலை திவாலாகப் போகிறது என்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் வைத்திருப்பது வருந்தத்தக்கது.
பொருளாதாரம் குறித்தும் நிதி நிலை மேலாண்மை குறித்தும் எந்த ஒரு அடிப்படையும் இல்லாதவர்கள்தான் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை அரசு மீது வைக்க முடியும். அவர் ஆட்சியில் இருந்தபோது 10 ஆண்டுகளில் குறைவாக கடன் வாங்கியதாகவும், தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் அதிகமாக கடன் வாங்கியதாகவும் கூறுகிறார். அடிப்படை புரிதல் இல்லாமல் கூறுகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
2011ல் வரவு செலவு திட்டத்தில் மொத்த மதிப்பு பட்ஜெட் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடிதான். அப்போது உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்து 51 ஆயிரம் கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு தமிழக பட்ஜெட் திட்டம் ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் கோடி. இப்போது நமது உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.31.55 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. வித்தியாசத்தை இந்த புள்ளிவிரம் மூலம் அறியலாம்.
உள்நாட்டு உற்பத்தி மத்திப்பை வைத்துத்தான் ஒரு மாநிலம் கடன் வாங்கும் திறனை நிர்ணயிக்க முடியும். கடந்த 15வது நிதிக்குழு 2021-22ல் தமிழகம் 28.7 சதவிகிதம் கடன் வாங்கலாம் என்று தெரிவித்துள்ளது. ஆனால், 27.01 சதவிகிதம் மட்டுமே கடன் வாங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கடந்த 2022-23ம் ஆண்டில் நமக்கு பரிந்துரைத்தது 29.3 சதவிகிதம். ஆனால், 26.87 சதவிதமும், 2023-24ல் பரிந்துரைக்கப்பட்ட 29.1 சதவிகிதத்தில் நாம் கடன் வாங்கியது 26.72. 2024-25ல் பரிந்துரைக்கப்பட்ட 28.9 சதவிகிதத்தில் கடன் பெற்றது 26.4 சதவிகிதம் மட்டுமே. நிதிக்குழு பரிந்துரை செய்ததைவிட குறைந்த அளவில்தான் கடன் வாங்கியுள்ளோம். வரம்புக்குள்தான் நாம் கடன் வாங்கியுள்ளோம். கடன் வாங்குவதை தொகை அளவில் பார்க்காமல் புள்ளிவிவர அடிப்படையில் பார்க்க வேண்டும்.
தமிழகத்தின் நிதி நிலை கட்டுக்குள் இருக்கிறது. மேலும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி அதிகமாக வரிவசூல் செய்துள்ளதையும் பழனிசாமியே ஒப்புக்கொண்டு தெரிவித்துள்ளார். இது நமது திறமையான நிதி மேலாண்மையை காட்டுக்கிறது. வணிக வரி சதவிகிதம் உயர்ந்துள்ளது. நிதி மேலாண்மையில் நுட்பமாக செயல்படுகிறோம்.
மெட்ரோ திட்டத்திற்கு அமித்ஷாவை அழைத்து அடிக்கல் நாட்டினர். ஆனால் பணம் வரவில்லை. இப்போது தமிழக அரசு ரூ.26 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. மின்வாரியத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இருந்த நிதி சுமையை நாங்கள் சரிசெய்துள்ளோம். பேரிடர் நிதியாக மாநில நிதியாக வழங்கியுள்ளோம். மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதி வரவில்லை. கல்வித்துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி வர வேண்டியதை மத்திய அரசு விடுவிக்கவில்லை. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மாநில அரசு உயர்த்தி வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு அதன் பங்களிப்பை உயர்த்தவில்லை. எனவே, எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமி பொது வெளியில் குற்றம் சாட்டுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
வடமாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. தென் மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் 15 சதவிகிதம் மட்டுமே கிடைத்துள்ளது. ரூ.27,336 ஆயிரம் கோடி மட்டுமே கிடைத்துள்ளது. உத்தரபிரசேசத்திற்கு மட்டும் ரூ.31 ஆயிரத்து 39 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது ரூ.7 ஆயிரத்து 57 கோடி மட்டுமே. தமிழக நிதிலையை நாம் திறமையாக கையாளுவோம். தமிழகத்திற்கு உரிய நிதி பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்கு விடுவிக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும்.
சென்னை விமான நிலையம் 1,300 ஏக்கர்தான் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 2 கோடி பேர் பயணிகள் வந்துசெல்கிறார்கள். இன்றும் 7 ஆண்டில் பயிகள் எண்ணிக்கை 3.5 கோடியாக உயரும். அடுத்த 10 ஆண்டில் 8 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பரந்தூர் விமான நிலையம் அவசியமாகிறது. உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால்தான் வளர்ச்சி அதிகரிக்கும். பரந்தூர் விமான நிலையமும் தொழில் புரட்சிக்கு ஆதாரமாக அமையும்.
பரந்தூர் மக்களை விஜய் மட்டுமல்ல, எந்த கட்சி தலைவரும் பொதுமக்களை சந்திக்கலாம். அவர்களது குறைகளை கேட்டு அதை அரசின் கவனத்திற்கு கொண்டுவரலாம். குறைகளைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும். அங்கு உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மறு குடியமர்வை ஏற்படுத்த வாழ்வாதாரத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர்நிலைகளை காக்கவும் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வருவது பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.” என்று கூறினார்.