Published : 19 Jan 2025 11:06 AM
Last Updated : 19 Jan 2025 11:06 AM
சென்னை: நாய்க்கடியால் தமிழகத்தில் 2024ம் ஆண்டில் 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. எண்ணிக்கை அதிகரிப்பு, உணவு கிடைக்காத நிலை, போக்குவரத்து இரைச்சல், விளக்கு வெளிச்சம் போன்ற காரணங்களால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு ஆக்ரோஷமாக மாறும் நாய்கள் மனிதர்களைக் கடிக்கின்றன.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். அதில், ரேபிஸ் உள்ளிட்ட தொற்றால் 30-க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். கடந்த, 2023ம் ஆண்டில் 4.40 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2024ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 4 லட்சத்து 79,705 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 37,011 பேரும், தஞ்சாவூரில் 24,038 பேரும், திருச்சியில் 23,978 பேரும், புதுக்கோட்டையில் 21,490 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், சென்னையில் 11,704, கோவையில் 14,453, மதுரையில் 12,024, செங்கல்பட்டில் 17,076, திருவள்ளூரில் 15,191, காஞ்சிபுரத்தில் 4,612 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,"நாய்க்கடிகள் அதிகரித்து வந்தாலும், அதற்கான தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தயார் நிலையில் உள்ளன. குறைந்தது 20 குப்பிகள் அளவுக்கு மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் 24 மணி நேரமும் இலவசமாக வழங்கப்படுகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் கடித்தாலும் அலட்சியம் காட்டாமல், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.
திடக் கழிவுகளை முறையாக அகற்றாததால் நாய்கள் எண்ணிக்கை கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு அதிகரிக்கிறது. உணவு பற்றாக்குறை போன்றவற்றாலும் நாய்கள் பாதிக்கப்பட்டு, சாலையில் செல்வோரை கடிக்க முற்படுகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT