

பணி செய்ய விருப்பமில்லை என்று உள்துறைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பிய ஆர்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ராமநாதபுரம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்தவர் சரவணன். இவர், கடந்த 11-ம் தேதி தமிழக உள்துறைச் செயலருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். "காவல் துறையில் 16 ஆண்டுகளாக நன்முறையில் பணிபுரிந்து வருகிறேன். திருவாடானை காவல் உட்கோட்ட முகாம் அலுவலக எழுத்தர், ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தன்னிச்சையாக தொடர்ந்து பணிகளை வழங்கி, எனது நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார். ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் ஒப்பளிக்கப்பட்ட காவலர்களில் 10 பேர், அனுமதியின்றி அயல்பணியாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், காவல் ஆய்வாளரான எனது ஓட்டுநரை வேறு பணிக்கு வருமாறு ஆயுதப் படையில் இருந்து தன்னிச்சையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் எனது காவல் நிலையத்தில் 328 புலன் விசாரணை வழக்குகள், 162 குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் 247 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.
வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய முடியாமல், வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது. எனது நிர்வாகத்தில் தலையிட்டு, சீர்குலைவை ஏற்படுத்துவதால் எனது காவல் ஆய்வாளர் பணியை திறம்பட மேற்கொள்ள முடியவில்லை. இதனால், ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் தொடர்ந்து ஆய்வாளராகப் பணிபுரிய விருப்பமில்லை. மேலும், சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் தொடர்ந்து பணிபுரிய விருப்பமில்லை என்ற விவரத்தை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ் குமார், காவல் ஆய்வாளர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.