Published : 17 Jan 2025 01:19 PM
Last Updated : 17 Jan 2025 01:19 PM
ஈரோடு: “எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து 20-ம் தேதி, சீமான் அறிவிப்பு வெளியிடுவார்” என ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறியதாவது: “விவசாயிகளும், நெசவாளர்களும் வாழ்வாதாரத்தை இழக்க திராவிட ஆட்சிகள் குறிப்பாக திமுக தான் காரணம். அரசியல் என்பது மக்களுக்குச் செய்யும் சேவை என்று சீமான் என்னை வேட்பாளராக நிறுத்தி உள்ளார். திராவிட கட்சிகள் பதவியை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தியதால், மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
நான் இந்த பகுதியில் 13 ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன். இப்பகுதி மக்களின் தேவைகள் எனக்குத் தெரியும். மஞ்சள் நகரான ஈரோடு, இன்று புற்றுநோய் நகராக மாறியுள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் தூர்வாரப்படாமல் கழிவுகள் நிரம்பி வழிகின்றன. அடிப்படை சாலை வசதி, சாக்கடை வசதிகள் இல்லை. மின் கட்டண உயர்வால் வணிகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான் வெற்றி பெற்றால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவோம். மக்கள் எங்களுக்கு வாக்குச் செலுத்தி வெற்றி பெறச் செய்ய தயாராகி விட்டனர். இது வரை இல்லாத மாற்றத்தைத் தர ஈரோடு தயாராகி விட்டது. கடந்த இடைத்தேர்தலில், மக்களை பட்டியில் அடைத்தனர். இலவசங்களைக் கொடுத்து, பணத்தால் விலை பேசி, வாக்குகளை பறிக்கின்ற வேலையை திமுக அரசு செய்தது.
இந்த தேர்தலில் திமுக அரசு நாம் தமிழர் நிர்வாகிகள் 8 பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்து அராஜகத்தை தொடங்கி விட்டது. நாங்கள் சட்டத்தை மதித்து, கட்டுப்பட்டு நாங்கள் பிரச்சாரம் செய்வோம். இந்த மண்ணுக்கு தேவையான அனைத்தையும் சீமான் பேசி வருகிறார். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது 20-ம் தேதி உறுதியாகும். அதனை சீமான் அறிவிப்பார்,” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT