Published : 23 Aug 2014 01:51 PM
Last Updated : 23 Aug 2014 01:51 PM
அரக்கோணம் மின்சார ரயிலில் பெண்ணை பிளேடால் வெட்டி நகை பறித்துச் சென்ற கொள்ளையரின் கணினி வரைபடம் பயணிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என ரயில்வே காவல் கண்காணிப்பாளர் கயல்விழி தெரிவித்தார்.
அரக்கோணம் மின்சார ரயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பயணம் செய்த பாரதி, பிரேமா என்ற பெண்களிடம் இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்க முயன்றார். அப்போது பாரதி என்பவர் நகையை கொடுக்க மறுத்துள்ளார். இதனால், அவரது முகத்தில் பிளேடால் கிழித்து நகையை பறித்துக்கொண்டு தப்பினார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பாரதி சென்னையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே ஐஜி சீமா அகர்வால், காவல் கண்காணிப்பாளர் கயல்விழி ஆகியோர் விசாரணை நடத்தினர். கொள்ளையரை பிடிக்க 3 தனிப் படைகள் அமைத்துள்ளனர். இரவு 8 மணிக்குப் பிறகு திருத்தணியில் இருந்து சென்னை செல்லும் 3 மின்சார ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸார் கூட்டாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘பிளேடால் கிழித்து நகை பறித்துச் சென்ற நபர் அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
அவர் குறித்த விவரங்களை திரட்டி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த அடையாளத்தின்படி அந்த கொள்ளையரின் முகத்தை கணினியில் வரைந்துள்ளோம். இதை பயணிகளிடம் விநியோகம் செய்ய உள்ளோம். இரவு நேர ரயில்களில் யாரும் இல்லாத பெட்டிகளில் பயணிகள் ஏறுவதை தவிர்க்கலாம்.
இரவு நேரத்தில் அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். நிச்சயம் கொள்ளையரைப் பிடிப்போம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT