புதுச்சேரி - விழுப்புரம் பயணிகள் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு

விழுப்புரம் ரயில் நிலையத்தில் தடம்புரண்ட பயணிகள் ரயில் 
விழுப்புரம் ரயில் நிலையத்தில் தடம்புரண்ட பயணிகள் ரயில் 
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து விழுப்புரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (ஜன.14) காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டது. 7 பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில், சில அடி தூரம் சென்றதுமே ரயிலில் இருந்த 5-வது பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது.

அப்போது எழுந்த பயங்கர சத்தத்தால் ரயிலை உடனடியாக லோகோ பைலட் நிறுத்தினார். இதனால் புதுச்சேரி - விழுப்புரம் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்படுவது நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டு வேறு வாகனங்களில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

இதனையடுத்து விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே ஊழியர்களும், பொறியாளர்களும் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரயிலை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? அல்லது நாச வேலை ஏதேனும் காரணமா? என்பது குறித்து விழுப்புரம் ரயில்வே போலீஸார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in