

வடசென்னையின் முக்கிய பகுதியாக பெரம்பூர் விளங்குகிறது. இங்கு வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் அருந்ததி நகர் எனப்படும் பகுதி உள்ளது. இங்குள்ள இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.பி.பரந்தாமன் கூறியதாவது: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள திறந்தவெளி பகுதியில் மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணியும் மந்த கதியிலேயே நடைபெறுகிறது. இதற்கு பின்பு ஜமாலியா அருகே மைதானம் அமைக்கும் பணி தொடங்கி, நிறைவடைந்துவிட்டது.
தற்போது மைதானத்தை சுற்றி இருபுறங்களிலும் ‘எல்’ வடிவில் வலை அமைக்க இருப்பதாக தெரிகிறது. அதன்படி, ரயில் தண்டவாளம் மற்றும் நார்த் டவுன் இருக்கும் பகுதிகளில் மட்டும் வலை அமைக்கப்படவுள்ளது. மைதானத்தை சுற்றி 4 புறத்திலும் வலை அமைத்தால் தான் விளையாட்டு பந்து வெளியே செல்லாமல் விளையாட முடியும்.
இதை கருத்தில் கொண்டு 30 அடி உயரத்தில் வலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம், புதர் மண்டியிருக்கும் பகுதி அருகே மைதானம் அமைந்திருப்பதால் அவ்வப்போது சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. எனவே, மைதானத்தை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி தரப்பில் ஒரு பாதுகாவலரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.