Published : 14 Jan 2025 01:51 AM
Last Updated : 14 Jan 2025 01:51 AM
‘தமிழ்நாடு அரசின் வன சட்ட திருத்த வரைவைத் திரும்பப்பெற வேண்டும்’ என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கை:
ஜன.9-ம் தேதியன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சட்டத்தில் வேளாண் உற்பத்தியை, மனித உயிர்களைப் பறிக்கும் காட்டுப் பன்றிகளை தடுப்பதற்காக திருத்தங்கள் செய்து அறிவிக்கப்பட்டுள்ளன. 20 ஆண்டு காலத்துக்கும் மேலாக விவசாயிகளும் அப்பாவி மக்களும் அடைந்து வருகிற இழப்புக்கும், துன்பத்துக்கும் இந்த திருத்தங்கள் பயனளிக்காது.
வன பாதுகாப்பு எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் பன்றிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை தடுக்க முடியாது என்றால், அங்கு ஏற்படும் இழப்புக்கு ஈடு என்ன என்பதை அரசு சொல்ல வேண்டும். வன விலங்குகளுக்கு வனம்தான் புகலிடம். வனத்தை வேறு வகை பயன்பாட்டுக்காக அழித்துவிட்டு சமவெளிப் பகுதிகளை கூடுதலாக சேர்த்து வன வளையத்துக்குள் கொண்டு வருவது என்ன நியாயம்?
வன எல்லைக்கப்பால் 3 கி.மீ. தூரத்துக்குள் வரும் காட்டு பன்றிகளை வனத்துறையிடம் முறையிட்டால் அவைகளை திரும்ப காடுகளில் கொண்டுபோய் விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வனத்துறையில் போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில்.. ஆக்ரோஷமாக வரும் பன்றிகளை பிடித்துக் கொண்டு போய் காட்டில் விடுவதற்கான பயிற்சியும் போதுமான ஊழியர்களும் இல்லாதபோது இது எப்படி சாத்தியம் ஆகும். அதுவரை பன்றிகளால் பாதிக்கப்படுகிற வேளாண் பயிர்களுக்கு என்ன இழப்பீடு வழங்கப்படும்.
மேலும், 3 கி.மீ.க்கு அப்பால் வரும் பன்றிகள் குறித்து கூறினால், வனத்துறை ஊழியர்களே அதை சுட்டு விடுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. காட்டுப் பன்றிகள் கர்ப்பமாக இருந்தாலோ, இளம் குட்டிகளாக இருந்தாலோ அவற்றை சுடக்கூடாது என முன்னரே வனச் சட்டத்தில் உள்ளது. இந்நிலையில், பகலில் பதுங்கு குழிகளிலும் புதர்களிலும் பதுங்கி உள்ள உள்ள பன்றிகளை எப்படி சோதித்து சுட முடியும். இந்த நெருக்கடியில் வனத்துறையினரால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க இயலாது.
அதேபோல், இந்த வனச் சட்ட திருத்தத்தில் மேலும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மலைவாழ் மக்கள் மற்றும் மலையடிவாரம் வாழ்வோர்களின் கால்நடைகள் மேய்ச்சல் என்பது பல காலங்களாக நடந்துவரும் வனச்சட்ட அனுமதி ஆகும். கால்நடைகளின் எச்சங்கள் காடுகளின் வளர்ப்புக்கும், வனப்புக்கும் பயன்படக்கூடியது என்பதால்தான் கால்நடைகள் மேய்ச்சல் அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சட்டதிருத்தம் இதைத் தடுக்கிறது. எனவே, இந்த சட்ட திருத்தத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT