Published : 14 Jan 2025 01:38 AM
Last Updated : 14 Jan 2025 01:38 AM

தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது: பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுவோருக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகைக்கான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக செயல்படுத்துவது மட்டுமல்லாமல், கிராமியப் பகுதிகளில் நீடித்த மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குகிறது. இத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் தேசிய அளவில் செயல்படுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.

தமிழகத்தில் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 லட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர். 86 சதவீதம் வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுடன் கிட்டத்தட்ட 29 சதவீதம் தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டில், இம்மாதம் 6-ம் தேதி வரை 20 கோடி மனித உழைப்பு நாட்களாக இருந்த நிலையில், தமிழ்நாடு ஏற்கெனவே 23.36 கோடி மனித உழைப்பு நாட்களை எட்டியுள்ளது. தமிழ்நாட்டுக்கான தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தை 20 கோடி மனித சக்தி நாட்களிலிருந்து 35 கோடி மனித சக்தி நாட்களாக உயர்த்துவதற்கான செயற்குறிப்பு ஏற்கெனவே மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

தற்போது தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தின்படி ஊதிய நிதி முற்றிலும் தீர்ந்துவிட்டதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ரூ. 1,056 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அத்துடன், தமிழ் மக்களின் முதன்மையான மற்றும் முக்கியமானதுமான அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் கடினமாக உழைத்த தொழிலாளர்களுக்கு ஊதியத்துக்கான நிதி விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நிலுவையில் உள்ள ரூ.1,056 கோடி ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி அமைச்சகத்துக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 2024-25 ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்துக்கு முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டதைப் போன்று ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x