Published : 13 Jan 2025 08:25 PM
Last Updated : 13 Jan 2025 08:25 PM

கார், டிராக்டர் பரிசு, 2,026 காளைகள், 1,735 வீரர்கள்: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறப்பு அம்சங்கள்

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜன.14) நடைபெறுகிறது. சிறந்த மாடுபிடி வீரர், காளை உரிமையாளருக்கு கார் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இந்த போட்டிக்கு 2,026 காளைகள், 1,735 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கிராமங்களில் நடத்தப்படும் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் புகழ்பெற்றவை. 2017-ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு தமிழர்களுடைய வீர விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி, உலகம் முழுவதும் கவனம் பெற ஆரம்பித்தது. அதன்பிறகு நடந்த போட்டிகளுக்கு உள்ளூர் பார்வையாளர்கள் மட்டுமில்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்தனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் ஜல்லிக்கட்டு போட்டிகள், திருவிழா போல் மதுரையில் கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை (ஜன.14) நடக்கிறது. இந்த போட்டிக்கு 2,026 காளைகள், 1,735 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகள், மாடு பிடிவீரர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டி விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், சோதனை மையம், சிசிடிவி கேமிரா, வாடிவாசல் போன்ற அனைத்தும் அமைத்து போட்டிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

போட்டி நாளை காலை 7 மணிக்கு தெடாங்குகிறது. போட்டிகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைக்கின்றனர். போட்டிகள் மாலை 7 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் 50 காளைகள் அவிழ்த்துவிடப்படும்.

மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு மாடுகளை பிடிக்க அனுமதி இல்லை. அவர்கள் உடனடியாக போட்டியில் இருந்து விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காளைகளை கொண்டு வருபவர்கள், மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதி டோக்கன்களையும், காளை உரிமையாளர்களின் ஆதார் அட்டையையும் கண்டிப்பாக கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்பர்.

போட்டி நேரம் நீட்டிப்பு செய்வது தொடர்பாக போட்டியின் நிலையைப் பொறுத்து மாவட்ட ஆட்சியரால் முடிவெடுக்கப்படும். ஆள்மாறாட்ட முறைகேட்டை தடுக்கும் வகையில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் QR கோடுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் ,குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்படுகின்றன.

சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படவுள்ளது. காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்க, வாடிவாசல் முன் 200 மீட்டருக்கு தேங்காய் நார் பரப்பப்பட்டு பிரத்தியேக ஜல்லிக்கட்டு விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. போட்டியை பார்க்க பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு கேலரி, பாதுகாப்பு வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. போட்டிகளை கண்காணிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சிங்கா தலைமையில் 2,500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x