Published : 13 Jan 2025 01:14 AM
Last Updated : 13 Jan 2025 01:14 AM
பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத, மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என்று என்று ஆளுநர் மாளிகை விமர்சித்துள்ளது.
2025-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. தேசிய கீதம் இசைக்கப்படாததால் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதாக, ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது. ஆளுரை வெளியேறியதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று ஆளுநர் மாளிகை எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை செய்ய சொல்வதையும் அபத்தமானது மற்றும் சிறுபிள்ளைத்தனமானது என்கிறார். பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி.
இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT