சாலமன் பாப்பையா மனைவி மறைவு - அமைச்சர்கள், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி

சாலமன் பாப்பையா மனைவி மறைவு - அமைச்சர்கள், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி

Published on

மதுரை: மதுரையில் வயது முதிர்வு காரணமாக காலமான தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் உடலுக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மதுரையைச் சேர்ந்தவர் தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா. இவர், அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி ஜெயபாய் (86). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வயது முதிர்வு காரணமாக இன்று காலை ஜெயபாய் காலமானார். அவரது உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சாலமன் பாப்பையாவுக்கும், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த தமிழஞறிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், தமிழ் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என, ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மாலையில் அவரது இல்லத்தில் இறுதி சடங்கு நடந்தது. தத்தனேரியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது என, குடும்பத்தினர் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in