டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக போராடிய 5,000 பேர் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் தகவல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை: மதுரையில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக போராடிய 5,000 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி சார்பில், அம்ருத் 2.0 திட்டத்தில் மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் 31 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.471.89 கோடியில் 500 கி.மீட்டர் தூரத்திற்கான புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா உத்தங்குடியில் நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், “முதல்வர் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து மேலூர் மக்களுக்காக துணை நின்றார். அண்ணாமலை மேலூர் மக்களை சந்தித்து டங்ஸ்டன் திட்டம் முழுமையாக மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டம் என கூறியுள்ளார். நமது அரசு மீது மத்திய அரசு வதந்தியை பரப்புகிறது.

முதல்வர் மேலூர் பகுதியில் இருந்து ஒரு பிடி மண்ணைகூட அள்ள முடியாது என தெளிவாக கூறியுள்ளார். நான் இருக்கும் வரையிலும் வராது. வரும் சூழல் ஏற்பட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என அவர் உறுதியளித்துள்ளார். டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக போராடிய மேலூர் பகுதி மக்கள் 5 ஆயிரம் பேர் மீதான காவல் துறையின் வழக்கு, முதல்வரின் அறிவுறுத்தலின்படி ரத்து செய்யப்படுகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in