Published : 12 Jan 2025 07:08 AM
Last Updated : 12 Jan 2025 07:08 AM
சென்னை: பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 7 இடங்களில் தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று பதில் அளித்தார். அதன் நிறைவாக, 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் பேசியதாவது:
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை, அதன் சுற்றுப்புற பகுதி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் புதிதாக 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்டம் தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும். இத்தகைய குற்றங்களில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு முன்விடுதலை கிடைக்காத வகையில் தமிழக சிறைத் துறை விதிகளில் திருத்தம் செய்யப்படும்.
புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகி உள்ளன. இந்த நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் புதிய சாலைகள் அமைக்கவும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து புதுப்பிக்கவும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளால் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவும் வரும் ஆண்டுகளில் ரூ.3,750 கோடியில் நகர்ப்புற சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.
மக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்த, வரும் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த அரசு பதவி ஏற்ற பிறகு, ஏழை எளிய பட்டியலின மக்களுக்கு 2.67 லட்சம் மனைகளை வரன்முறைப்படுத்தி இ-பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில், அவர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சீர்செய்தும், புதிதாக நிலங்களை கையகப்படுத்தியும் ஒரு லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.
ஆளுநர் மீது விமர்சனம்: தமிழக சட்டப் பேரவையின் மாண்பையும் மதிக்காமல், மக்களது எண்ணங்களுக்கும் மதிப்பு தராமல் தமிழ்த்தாய் வாழ்த்தையே அவமானப்படுத்த துணிந்ததன் மூலமாக, தான் வகிக்கும் பதவிக்கும் பொறுப்புக்கும் இழுக்கு ஏற்படுத்தும் செயலை அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செய்வது இந்த மன்றம் இதுவரை காணாதது. இனியும் காணக் கூடாதது என்று பதிலுரையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை விமர்சித்தார்.
‘அப்பா’ என்பதில் மகிழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிலுரையின்போது, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் என்று கூறி, ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார். அப்போது, ‘‘புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தால் பயன்பெறும் மாணவிகள் என்னை ‘அப்பா’ என்று அழைப்பதை கேட்டு மிகவும் மகிழ்வுற்றேன்’ என்று தெரிவித்தார். அவ்வாறு சொல்லும்போது உணர்ச்சிப் பெருக்கில் முதல்வர் கண்கலங்கினார். சில நிமிடங்களுக்கு பிறகு முதல்வர் பேச்சை தொடர்ந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT