

கடலூர்: ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ச் அணிந்து வந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்களை 5 பேரை இரு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்து கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்த நிலையில், ‘யார் அந்த சார்?’ என கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள், அதற்கான ஆதாரம் இருந்தால் விசாரணை குழுவுடன் தெரிவிக்கலாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஜன.9) கடலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் சுந்தரி ராஜா தலைமையிலும் ஆணையாளர் டாக்டர் அனு முன்நிலையிலும் நடைபெற்றது. கூட்டதுக்கு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ‘யார் அந்த சார்?’ பேட்ச் அணிந்து வருகை தந்தனர்.
அந்த பேட்ஜை கழட்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள் முயன்றதால் இரு கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேயர் சுந்தரி ராஜா அமைதிப்படுத்த முயற்சி செய்தும், முடியாததால் மேயருக்கு மதிப்பளிக்காத அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பரணிமுருகன், சங்கீதா, வினோத்குமார், அலமேலு, தட்சிணாமூர்த்தி ஆகிய 5 பேரை இரண்டு கூட்டதுக்கு சஸ்பெண்ட் செய்வதாக மேயர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அவர்களை காவல் துறையினர் வெளியேற்ற சென்றனர். ஆனால், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரும் கூட்டத்திலிருந்து வெளியேறினர். இதனால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.