Published : 03 Jul 2018 10:04 AM
Last Updated : 03 Jul 2018 10:04 AM
குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தியாகராய நகர் காவல் மாவட்ட துணை ஆணையர் பி.அரவிந்தன் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
தேனாம்பேட்டை, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் ஈஸ்வரன். இவரது மனைவி வரலட்சுமி. இவர்களது 4 வயது மகன் அவினாஷ். இந்நிலையில், அதேபகுதி திருவள்ளூர் சாலையில் தாய் வரலட்சுமியுடன் ஐஸ்கிரீம் வாங்கச் சென்றான். அப்போது, அவனை வழியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கோபால்சாகு (25), அவரது நண்பர் வினோத் விகாரி (22) உட்பட 3 பேர் கொஞ்சினர்.
இதைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (24) என்பவர் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என ஒடிசா இளைஞர்களை பார்த்து தெரிவித்தார். இதனால், அங்கு பொது மக்கள் திரண்டனர். வடமாநில இளைஞர்களை அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸாரின் விசாரணையில் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர்கள் சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குழந்தை கடத்தல் வதந்தி பரப்பியதாக பாலமுருகனை தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தி.நகர் காவல் துணை ஆணையர் பி.அரவிந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:
சந்தேக நபர்கள் குறித்து 100-க்கு போன் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும். போலீஸார் அடுத்த ஒரு நிமிடத்தில் சம்பவ இடத்துக்கு வந்து விடுவார்கள். சட்டத்தை கையில் எடுத்து தாக்குதல் நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் அனைவரும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT