

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 10, 11-ம் தேதிகளில் கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனி நிலவ வாய்ப்புள்ளது.
நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 8-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 9-ம் தேதி ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10, 11-ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 11-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
வறண்ட வானிலை: நேற்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் குறிப்பிடும்படியாக மழை பதிவாகவில்லை. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவியது அதிகாலை நேரங்களில் லேசான பனிப்பொழிவும் காணப்பட்டது.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) அளவுகளின்படி மலைப்பகுதிகளில் அதிகபட்சமாக குன்னூரில் 8.5 டிகிரி, உதக மண்டலத்தில் 8.6 டிகிரி, கொடைக்கானலில் 10 டிகிரி, வால்பாறையில் 15 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுவதால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருகிறதா என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பால சந்திரனிடம் கேட்டபோது, “10,11-ம் தேதிகளில் தமிழகத்தில் மழை வாய்ப்புகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்னும் விலகவில்லை. விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் தென்படவில்லை” என்றார்.