முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட தான்யாவுக்கு வீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட தான்யாவுக்கு வீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட தான்யா குடும்பத்துக்கு புதிய வீட்டுக்கான சாவி, மாற்றுத் திறனாளியான அனுசுயாவுக்கு தானியங்கி சக்கர நாற்காலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோரை ஊராட்சி வீராபுரம் பகுதியைச் சார்ந்த சவுபாக்யா மற்றும் ஸ்டீபன் ஆகியோரின் மகளான தான்யா முகச்சிதைவு நோயால் அவதிப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தனது நிலை குறித்து குறுஞ்செய்தி மூலம் தெரிவித்தார்.

இதையடுத்து, சிறுமி தான்யாவின் அறுவை சிகிச்சை செலவு முழுவதையும் ஏற்றதுடன் சிறுமி கேட்டுக்கொண்டதன் பேரில், பெற்றோருக்கு இலவச வீட்டு மனையை வழங்கி அரசின் மூலம் வீடு கட்டித்தர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் கிராமத்தில் வழங்கப்பட்ட 3 சென்ட் வீட்டு மனையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகட்டி முடிக்கப்பட்டது. அவ்வீட்டுக்கான சாவியை முதல்வர் ஸ்டாலின், சவுபாக்யாவிடம் நேற்று வழங்கினார். தனக்கு மறுவாழ்வு அளித்து இலவச வீடு வழங்கியதற்காக சிறுமி தான்யா மற்றும் அவரது பெற்றோர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

தானியங்கி சக்கர நாற்காலி: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பானவேடு தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த அனுசுயா என்ற மாற்றுத்திறனாளி தனது உடல்நிலை குறித்து தெரிவித்து தானியங்கி சக்கர நாற்காலி வழங்க வேண்டி முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று, அனுசுயாவுக்கு நேற்று தானியங்கி சக்கர நாற்காலியை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in