

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தொடரப்பட்ட மறுஆய்வு வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடந்த 2006 - 2011 காலகட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீதான வழக்கை விசாரித்த கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பன்னீர்செல்வம் உட்பட 3 பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்சஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது லஞ்சஒழிப்புத் துறை தரப்பில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை மேற்கோள்காட்டி குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், அதை கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளத் தவறிவி்ட்டதாகவும் வாதிடப்பட்டது.
பதிலுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரப்பில் குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் வருமானத்துக்கு அதிகமான சொத்து என லஞ்சஒழிப்புத் துறை தவறுதலாக கணக்கிட்டுள்ளது. இந்த வழக்கில் கடலூர் நீதிமன்றம் சரியான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.