புதியவர்கள் Vs பழையவர்கள்: போட்டி போட்டு விழா நடத்தும் கும்பகோணம் தவெக-வினர்!

புதியவர்கள் Vs பழையவர்கள்: போட்டி போட்டு விழா நடத்தும் கும்பகோணம் தவெக-வினர்!
Updated on
2 min read

விஜய் கட்சி தொடங்கிய நாளில் இருந்து கும்பகோணத்தில் போட்டி போட்டுக் கொண்டு சிலர் கோஷ்டி கோஷ்டியாக நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஒரு தரப்பினர் போஸ்டர் ஒட்டினால் இரண்டு நாள் கழித்து இன்னொரு தரப்பு அதே இடத்தில் போஸ்டர் ஒட்டுகிறது.

எல்லாமே பதவி படுத்தும்பாடு தான். அண்​மையில் தராசுரம் தொழில​திபர் எஸ்.பிர​பாகரன் தலைமையில் தவெக-வில் இணைந்த மருத்​துவர் அஜய் சர்மா, முஸ்லிம் அமைப்பு ஒன்றி​லிருந்து விலகி தவெக-வில் இணைந்த தொழில​திபர் டி.ஆசிப் அலி, அதிமுக-வில் இருந்து விலகி வந்த ஆர்.ஆர்​.​பாண்​டிய​ராஜன் உள்ளிட்டோர் தான் இப்போது மாறி நல உதவி நிகழ்ச்​சிகளை நடத்தி கும்பகோணத்து மக்களை திணறடித்து வருகின்​றனர்.

புதிதாக வந்து சேர்ந்​தவர்​களுக்கு மத்தியில் காலம் காலமாக விஜய் மக்கள் இயக்கத்தில் இயங்கி வரும் தங்கதுரை, நிஜாம், ஃபெலிக்ஸ், வினோத் உள்ளிட்​ட​வர்​களும் ஏதோ தங்களது வசதிக்கேற்ப கொடி ஏற்றுதல், நல உதவிகள் வழங்குதல் என பிசியாக இயங்கி வருகின்​றனர்.

இவர்கள் அனைவருமே தங்களுக்குள் போட்டி போட்டுக்​கொண்டு நிகழ்ச்​சிகளை நடத்தி​னாலும் அனைவருமே தஞ்சை மாவட்டப் பொறுப்​பாளர் விஜய்​சரவணனை பிரதானப்​படுத்தி வருவது குறிப்​பிடத்​தக்கது. எல்லாமே பதவியைப் பிடிக்​கத்தானா என தாராசுரம் எஸ்.பிர​பாகரனிடம் கேட்டதற்கு, “25 ஆண்டுகளாக விஜய் ரசிகனாக உள்ளேன்.

அவர் கட்சி தொடங்​கியதும் மக்களுக்கு சேவையாற்ற ஒரு வாய்ப்புக் கிடைத்ததாக எண்ணி முழு நேர அரசியல்​வா​தியாக மாறி, கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். மற்றபடி எனக்கு பதவிக்கு வரவேண்டும் என்ற உள்நோக்​கமெல்லாம் இல்லை. 2026-ல் விஜய்யை முதல்​வ​ராக்குவது மட்டுமே எங்களின் ஒரே நோக்கம்” என்றார்.

இதே கேள்வியை டி.ஆசிப்​அலி​யிடமும் கேட்டோம். “விஜய்யின் கொள்கைகள் பிடித்துப் போனதால் தவெக-வில் இணைந்​தேன். மற்றபடி பதவியை எதிர்​பார்த்து இந்தக் கட்சிக்கு வரவில்லை. விஜய்யை முதல்​வ​ராக்கு​வதற்காக அடிப்படை உறுப்​பினராக இருந்து பணியாற்றத் தயாராக உள்ளேன்.

அதேசமயம் என் மீது நம்பிக்கை வைத்து விஜய் எனக்கு பொறுப்பு வழங்கினால் பொறுப்பை உணர்ந்து திறம்பட செயலாற்று​வேன்” என்று சொன்னார் அவர். ஒருங்​கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட தவெக பொறுப்​பாளர் ஆர். விஜய்​ சர​வணனிடமும் இதுகுறித்து பேசினோம்.

“விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போது பொறுப்​பாளர்கள் அதிகம் இல்லை. இப்போது அரசியல் கட்சி​யாகி​விட்​டதால் பொறுப்​பாளர்களை நியமிக்க வேண்டி இருக்​கிறது. இந்த நியமனங்​களில் பழையவர்​களுக்கும் புதிய​வர்​களுக்கும் அவரவரின் செயல்​பாடுகளை வைத்து பொறுப்புகள் வழங்கப்​படும். பொருளாதார பின்னணி இல்லாத போதும் இயக்கத்​துக்காக உழைத்​தவர்களை நிச்சயம் கட்சி கைவிட்டு விடாது” என்று சொன்னார் அவர். இது போதா​தா... வந்தவர்​களும் இருப்​பவர்​களும் போட்டி ​போட்டுக்​கொண்டு ​போஸ்​டர்களை ஒட்ட?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in