

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் பெயரை சென்னையின் முக்கிய சாலைக்கு சூட்ட வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மதிமுக மாமன்ற உறுப்பினரும் மாவட்டச் செயலாளருமான ப.சுப்பிரமணி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நூற்றாண்டு கண்ட இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் தியாகத்தை போற்றும் வகையில், அவருக்கு அண்ணல் அம்பேத்கர் விருதை முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியும் தகைசால் தமிழர் விருதை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் வழங்கி பெருமை சேர்த்துள்ளனர்.
எனவே, நல்லகண்ணு வாழும் காலத்திலேயே சென்னையின் முக்கிய சாலை ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டி பெருமைப்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் எனது சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.