

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசும் ஆளுநரும் மோதல் போக்கை கைவிட வேண்டும் என்று முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான பேராசிரியர் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் உறுப்பினரும், கல்வியாளருமான இ.பாலகுருசாமி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ''தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களைத் தேடும் குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரதிநிதியைச் சேர்ப்பது தொடர்பான விஷயத்தில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் நீண்டகாலமாக மோதல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதன் விளைவாக பல பல்கலைக்கழகங்களில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக துணைவேந்தர்கள் இல்லை. அத்துடன் அடுத்த ஓரிரு மாதங்களில் அனேகமாக எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்கள இல்லாத நிலை ஏற்படும்.
பல பல்கலைக்கழகங்களில் முழுநேர பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள், நிதி அலுவலர்கள் இல்லை. துணைவேந்தர் பதவிகளும் இதர மூத்த அலுவலர்களும் இல்லாமல் இருப்பது பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை முடக்கி, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கல்வியாளர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கும் கவலை தரக்கூடியதாகும். காரணம், இந்த நிலை மாணவர் நலனுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளின் தரத்திலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் உரிய நேரத்தில் நடத்தப்படுவதில்லை. மேலும், பட்டப் படிப்புக்கான சான்றிதழ்களில் அதிகாரிகளே கையெழுத்துடுவது பட்டம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பைக் கேள்விக்குறி ஆக்கிவிடுகிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்: துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சீராக இருப்பதில்லை. ஒரு வழக்கில் யுஜிசி வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று கூறி துணைவேந்தர் நியமனமே ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குச் சில காலம் முன்பு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் யுஜிசி வழிகாட்டு நெறிகளின்படி திருப்திகரமாக இல்லை என்று சுட்டிக் காட்டி, துணைவேந்தரை சென்னை உயர் நீதிமன்றம் பதவிநீக்கம் செய்தது. இதை எதிர்த்த மேல்முறையீட்டில், உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சட்டத்தின்படியே குறிப்பிட்ட நபர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார் எனச் சுட்டிக்காட்டி, நீக்கப்பட்டவரையே மீண்டும் நியமிக்க உத்தரவிட்டது.
தமிழக அரசும் ஆளுநரும் இந்த விஷயத்தில் தங்களது வறட்டு கவுரவத்தை ஒதுக்கிவிட்டு, விரும்பத் தகாத இந்த முட்டுக்கட்டைக்கு இணக்கமான தீர்வு காணவேண்டிய தருணம் இது. துணைவேந்தர்களுக்கான தேடல் குழுக்கள் பல்கலைக்கழகங்களின் சட்டங்களின்படியே அமைக்கப்படுகின்றன. தற்போதுள்ள தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் யுஜிசி பிரதிநிதியைத் தேடல் குழுக்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பதற்கு இடமில்லை.
தேடல் குழுக்களில் யுஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்வது துணைவேந்தர் நியமனத்தில் பாரபட்சத்தையும் அரசியல் குறுக்கீட்டையும் கட்டுப்படுத்தும் என்பதால் அது வரவேற்கத் தக்கதுதான். என்றாலும், அதை யாரும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. அது மட்டுமின்றி, கல்வி தொடர்பானவை நீங்கலாக யுஜிசி விதிகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டியவை அல்ல.
துணைவேந்தர் தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான பிரிவை பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் இடம்பெறச் செய்வதே இதற்குத் தீர்வு. அதுவரை, தமிழக ஆளுநர் தற்போதைய நடைமுறைகள், மரபுகளை ஏற்பதற்கு இசைய வேண்டும். துணைவேந்தர்கள் நியமனங்களை விரைவுபடுத்த வேண்டும். அதுவே லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையைத் துடைக்கும். தமிழகத்தின் உயர் கல்வியின் ஒட்டுமொத்த நலன் கருதி, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரும் இணைவேந்தர்களான அமைச்சர்களும் தங்கள் மோதல் போக்கினைக் கைவிட்டு, இணைந்து செயல்பட வேண்டும்.' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.