Last Updated : 29 Aug, 2014 12:00 AM

 

Published : 29 Aug 2014 12:00 AM
Last Updated : 29 Aug 2014 12:00 AM

ஹாக்கி வாழும் வரை தயான் சந்தும் வாழ்வார்

இந்திய ஹாக்கியில் எத்தனையோ வீரர்கள் வந்து சென்றிருக்கலாம். சிலர் எப்போதாவது நினைவு கூறப்படலாம். சிலர் காலத்தின் போக்கில் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் ஓய்வுபெற்ற 66 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த உலகைவிட்டு சென்றுவிட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு ஹாக்கி வீரர் பேசப்படுகிறார் என்றால், அந்த மகத்தான வீரர் வேறு யாருமல்ல அவர்தான் “மேஜிக் மேன்” மேஜர் தயான் சந்த்.

ஹாக்கி என்றால் தயான் சந்த், தயான் சந்த் என்றால் ஹாக்கி தான். அவர் விளையாடிய காலம் இந்திய ஹாக்கியின் பொற்காலமாகவே கருதப்படுகிறது. இந்திய ஹாக்கிக்கு மட்டுமல்ல, இந்திய ராணுவத்துக்கும் மகத்தான பங்களிப்பு செய்தவர். கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு களத்தில் பந்தை கடத்துவதில் அசாத்திய திறமை பெற்றவர். அவருடைய ஆட்டம் மற்றவர்களுக்கு “மேஜிக் ஷோ” போன்றுதான் இருக்கும். அதன் காரணமாக பின்னாளில் “மேஜிக் மேன்” என்றழைக்கப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் 1905 ஆகஸ்ட் 29-ம் தேதி ராணுவ குடும்பத்தில் பிறந்தார் தயான் சந்த். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தயான் சந்தின் தந்தை சமேஷ்வர் தத் சிங்கும் ஒரு ஹாக்கி வீரர்தான். ஹாக்கி வீரரின் மகனாக பிறந்தாலும் இளம் வயதில் மல்யுத்த விளையாட்டின் மீதுதான் காதல் கொண்டிருந்தார் தயான் சந்த்.

சந்தும் சந்திரனும்…

தனது 16 வயதில் ராணுவத்தில் இணைந்தார் தயான் சந்த். அப்போதுதான் மல்யுத்த விளையாட்டை மறந்து ஹாக்கியில் காலடி வைத்தார். ஹிந்தியில் சந்த் என்றால் நிலவு என்று அர்த்தம். பெயருக்கேற்றாற்போலவே இந்த சந்துக்கும், அந்த சந்திரனுக்கும் தொடர்பு உண்டு. தினந்தோறும் பணியை முடித்துவிட்டு இரவில் ஹாக்கி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தயான் சந்த். ஆனால் அப்போது மைதானங்களில் மின்விளக்குகள் கிடையாது என்பதால், சந்திரன் ஒளிவீசத் தொடங்கிய பிறகுதான் இந்த சந்தின் ஆட்டமே தொடங்கும். அதனால் அவருடைய நண்பர்கள் தயான் சந்தை “சந்திரனே” என்றுதான் அழைப்பார்களாம்.

திருப்புமுனை

1922 முதல் 1926 வரை ராணுவ மற்றும் ரெஜிமென்ட் ஹாக்கிப் போட்டிகளில் விளையாடி வந்த தயான் சந்த், பின்னர் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ராணுவ அணியில் இடம்பிடித்தார். அதுதான் அவருடைய சர்வதேச ஹாக்கி வாழ்க்கைக்கு அச்சாரமிட்ட தொடர். அதில் 18 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி 15 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியைப் பதிவு செய்தது. இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் வெற்றி கண்ட இந்தியா, அடுத்த போட்டியில் மயிரிழையில் தோல்வியைத் தழுவியது. நியூஸிலாந்தில் பெற்ற வெற்றியின் மூலம் ராணுவத்தில் லான்ஸ் நாயிக்காக பதவி உயர் பெற்றார் தயான் சந்த்.

ஒலிம்பிக் பயணம்

ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டி மீண்டும் அறிமுகப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பங்கேற்கும் இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக 1925-ம் ஆண்டு மாகாண அளவிலான ஹாக்கிப் போட்டி நடத்தப்பட்டது. 5 மாகாண அணிகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் ஒருங்கிணைந்த மாகாண அணிக்காக களத்தில் குதித்தார் தயான் சந்த்.

முதல் போட்டியில் மத்திய முன்கள வீரராக களமிறங்கிய தயான் சந்த், பந்தை மிக அற்புதமாக கடத்திய விதம் போட்டியைப் பார்த்தவர்களுக்கு ஆச்சர்யமாகவும், எதிரணிகளுக்கு அதிர்ச்சியாகவும் அமைந்தது. அப்போதே இந்திய ஒலிம்பிக் அணியில் அவருடைய இடமும் உறுதியானது.

ஒலிம்பிக்கில் நிகழ்ந்த மேஜிக்

1928-ல் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, தயான் சந்தின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. குரூப் சுற்றில் இரு முறை தலா 3 கோல்களை அடித்த தயான் சந்த், அரையிறுதியில் 4 கோல்களை அடிக்க, இந்தியா 6-0 என்ற கணக்கில் ஸ்விட்சர்லாந்தை தோற்கடித்தது.

ஆனால் தயான் சந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரால் நெதர்லாந்துக்கு எதிரான இறுதியாட்டத்தில் விளையாட இயலாமல் போனது. எனினும் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்திய கோல் கீப்பர் ரிச்சர்ட் ஆலன், எதிரணிகளிடம் ஒரு கோல்கூட வாங்காமல் புதிய சாதனை படைக்க, அதிக கோல் அடித்தவர் என்ற பெருமை தயான் சந்துக்கு (14 கோல்கள்) கிடைத்தது. அப்போது இந்தியாவின் வெற்றியைப் புகழ்ந்த பத்திரிகை ஒன்று, “இது ஹாக்கி விளையாட்டல்ல, மேஜிக். ஹாக்கியின் வித்தைக்காரர் தயான் சந்த்” என்று குறிப்பிட்டது.

1932-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா 24-1 என்ற கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து 2-வது முறையாக தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா அடித்த 35 கோலில் 25 கோல் தயான் சந்த் மற்றும் அவருடைய சகோதரர் ரூப் சிங்கால் அடிக்கப்பட்டதாகும்.

இந்தியாவின் கேப்டன்

1934-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார் தயான் சந்த். 1936-ல் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்த் தலைமையில் பங்கேற்ற இந்திய அணி ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொண்டது.

பயிற்சி ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோற்றிருந்ததால், இந்திய வீரர்கள் மிகுந்த பதற்றத்தோடு இருந்தனர். மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்திய பிறகு இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு களமிறங்கிய இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தயான் சந்த் 3 கோல்களை அடித்தார்.

ஹாக்கியில் 22 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த தயான் சந்த், 1956-ம் ஆண்டு தனது 51-வது வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவர் மேஜராக பதவி வகித்தார். அதே ஆண்டில் இந்தியாவின் 3-வது உயரிய விருதான பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

வறுமையான வாழ்க்கை

ஓய்வுக்குப் பிறகும் ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தயான் சந்தின் கடைசி காலம் மோசமானதாக அமைந்தது. சாதனைகள் பல படைத்தபோதும் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அஹமதாபாதில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு அவர் சென்றபோது, யார் என்று தெரியாது எனக்கூறி திருப்பியனுப்பப்பட்ட அவமானமும் நிகழ்ந்தது.

இந்தியாவுக்காக 3 ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தந்த தங்க மகனான தயான் சந்த், பணத்திற்காக எப்போதுமே விளையாடியதில்லை. அதனால்தான் ஹிட்லரின் அழைப்பைக்கூட அவர் மறுத்தார். வாழ்நாளின் கடைசி வரை வறுமையோடே வாழ்ந்த அவர், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோதுகூட, சிறப்பு சிகிச்சை கிடைக்கவில்லை. எய்ம்ஸ்

மருத்துவமனையில் பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், 1979 டிசம்பர் 3-ம் தேதி மரணமடைந்தார்.

தயான் சந்த் வாழ்வார்

தயான் சந்த் மறைந்துவிட்ட போதிலும், அவர் ஆடிய ஆட்டமும், காட்டிய மேஜிக்கும் இப்போதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனையோ வீரர்கள் இன்னும் அவரை முன்மாதிரியாகக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகைவிட்டு சென்று 35 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவர் இன்றும் பேசப்பட்டு கொண்டிருக்கிறார். அவருடைய ஆட்ட நுணுக்கங்கள் பற்றி எங்கேயோ ஒரு மூலையில் யாராவது ஒருவர் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். ஹாக்கி வாழும் வரை தயான் சந்தும் அவருடைய மேஜிக்கும் வாழ்ந்து கொண்டேயிருக்கும்.

தேசிய விளையாட்டு தினம்

வாழும்போது அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அவர் பிறந்த தினமான ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டு, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதுகளும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும் வழங்கப்படுகின்றன. தயான் சந்தின் பெயரிலேயே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

“மேஜிக் மேனு”க்கு இன்று 109-வது பிறந்த நாள்.

ஹிட்லரை கவர்ந்த தயான் சந்த்

*22 ஆண்டுகால ஹாக்கிப் பயணத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் 1,000 கோல்களுக்கு மேல் அடித்திருக்கிறார். டெல்லியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானம், லண்டனில் உள்ள இந்திய ஜிம்கானா கிளப்பில் அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானம் ஆகியவற்றுக்கு தயான் சந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

*ஒருமுறை ஹாக்கி விளையாடியபோது தயான் சந்தால் கோலடிக்க முடியவில்லை. அப்போது நடுவர்களிடம் சென்ற அவர், கோல் கம்பத்தின் அளவு தொடர்பாக வாதிட்டது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் சர்வதேச விதிமுறைப்படி இரு கோல் கம்பம் இடையிலான அகலம் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது. இதிலிருந்து தயான் சந்தின் ஆட்டம் எவ்வளவு துல்லியமானது என்பதை அறியலாம்.

*1936 ஒலிம்பிக் போட்டியின்போது “ஹாக்கி மைதானத்தில் இப்போது “மேஜிக் ஷோவையும்” பார்க்கலாம். இந்திய “மேஜிக் மேன்” தயான் சந்தின் ஆட்டத்தைக் காண செல்லுங்கள்” என ஜெர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

*கிரிக்கெட்டின் பிதாமகன் என்றழைக்கப்படும் டான் பிராட்மேனும், தயான் சந்தும் 1935-ம் ஆண்டு அடிலெய்டில் சந்திக்க நேர்ந்தது. அப்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. தயானின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த பிராட்மேன், கிரிக்கெட்டில் ரன் அடிப்பதைப்போல் தயான் சந்த் கோலடிக்கிறார் என புகழ்ந்தார்.

*ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் தயான் சந்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் 4 கைகள் மற்றும் 4 ஹாக்கி மட்டைகளுடன் இருப்பார். அவரின் அபாரத் திறமையை பிரதிபலிக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

*லண்டனில் உள்ள சுரங்க ரயில்பாதையில் உள்ள ஒரு நிறுத்தத்துக்கு தயான் சந்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

*நெதர்லாந்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் தயான் சந்த் விளையாடியபோது அவருடைய மேஜிக் ஆட்டத்தைப் பார்த்து போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு வியப்பு ஏற்பட்டது. அவருடைய மட்டையின் உள்புறத்தில் காந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் மட்டை உடைத்துப் பார்க்கப்பட்டது.

*1936 ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்தின் ஆட்டத்தைப் பார்த்து ஜெர்மனியை அப்போது ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லரே, அசந்து போனார். அதன் எதிரொலியாக ஜெர்மனி குடியுரிமை தருவதாகவும், ஜெர்மனி ராணுவத்தில் பணி வழங்குவதாகவும் கூறி தயான் சந்தை இழுக்க நூல்விட்டார் ஹிட்லர். ஆனால் தயான் சந்தோ, சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x