மாணவி வன்கொடுமை விவகாரம்: பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கிய புஸ்ஸி ஆனந்த் கைதும், விஜய்யின் எதிர்வினையும்

மாணவி வன்கொடுமை விவகாரம்: பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கிய புஸ்ஸி ஆனந்த் கைதும், விஜய்யின் எதிர்வினையும்
Updated on
1 min read

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறி அதனை துண்டுபிரசுரமாக வழங்கிய தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட 250 பேரை சென்னையில் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலும் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தவெக தலைவர் நடிகர் விஜய் ஏற்கெனவே தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை அன்பு தங்கைகளே என குறிப்பிட்டு பெண்களுக்காக தனது கைப்பட எழுதிய கடிதத்தை, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ‘பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் துணை நிற்பேன்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில், விஜய்யின் இந்தக் கடிதத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கடிதத்தின் நகல்களை துண்டு பிரசுரமாக அக்கட்சியினர் அச்சடித்தனர். பின்னர் அவற்றை தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், மால்கள், கல்லூரிகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விநியோகித்தனர்.

இதன் ஒருபகுதியாக சென்னை தி.நகர் பேருந்து நிலையம் அருகில், தென்சென்னை மாவட்ட தலைவர் தி.நகர் க.அப்புனு தலைமையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துண்டு பிரசுரம் விநியோகித்தார். அப்போது, இதற்கு காவல் துறையில் அனுமதி பெறவில்லை எனக் கூறி போலீஸார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அங்கிருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதையறிந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்தனர். பின்னர் ஆனந்த் அடைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தி பிரச்சார சபா அருகில் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதையடுத்து, அவர்களும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல், கட்சியின் மகளிர் அணியினர் கோயம்பேட்டில் துண்டு பிரசுரம் வழங்கியபோது, போலீஸார் அவர்களையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, தவெக நிர்வாகிகள் கைது குறித்த அக்கட்சியின் தலைவர் விஜய், தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றவர்களை கைது செய்தது கண்டனத்துக்கு உரியது. கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களை சந்தித்த எம் கட்சித் தோழர்களை கைது செய்வதுதான் ஜனநாயகமா? இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகுகாலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in