தெரு நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டை - விபத்தை தடுக்க தஞ்சை மாநகராட்சி புதிய திட்டம்

தெரு நாய்களின் கழுத்தில் அணிவிக்கப்பட உள்ள ஒளிரும் பட்டை.
தெரு நாய்களின் கழுத்தில் அணிவிக்கப்பட உள்ள ஒளிரும் பட்டை.
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் வகையில், அவற்றின் கழுத்தில் ஒளிரும் பட்டை அணிவிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.

இவை சாலையின் குறுக்கே திடீரென பாய்வதால் வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் அவற்றுக்கு கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டதா என கண்டறியவும், அவற்றால் விபத்துகள் நேரிடாமல் தடுக்கவும், நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டைகள் அணிவிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் கூறியது: தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைக் கண்டறிந்து கருத்தடை செய்யும் பணி கடந்தாண்டு தொடங்கியது. அதன்படி, இதுவரை

3 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் விடப்பட்டுள்ளன. இதனால், சாலையில் திரியும் நாய்கள், கருத்தடை செய்யப்பட்டதா, இல்லையா என கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், அந்த நாய்கள் சாலையில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, கருத்தடை செய்யப்படும் நாய்களுக்கு கழுத்தில் ஒளிரும் பட்டை அணிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், நாய்கள் இரவு நேரங்களிலும் சாலையில் திரியும்போது, வாகன ஓட்டிகள் அவற்றை கண்டறிந்து விபத்து நேரிடாமல் தவிர்க்க முடியும். இந்தப் பணி வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in