சுனாமி நினைவு தினம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி

சுனாமி நினைவு தினம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி
Updated on
1 min read

புதுச்சேரி: சுனாமி 20-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கடலில் பால் ஊற்றி துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி அலை தாக்குதலால் புதுவை, காரைக்காலில் 500-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். கடலோர கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய சுனாமி நினைவு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 26-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 20-ம் ஆண்டு நினைவு தினம் இன்று புதுவை அரசு சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் அனுசரிக்கப்பட்டது.

சுனாமி பேரலை தாக்கிய கோர சம்பவங்கள் படங்களாக வைக்கப்பட்டிருந்தது. அங்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய்சரவணக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், நேரு, பாஸ்கர், லட்சுமிகாந்தன், பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல பல்வேறு மீனவ அமைப்புகள் சார்பில் சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கடலில் பால் ஊற்றி, மலர் தூவி சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மீனவர்கள் பலரும் சுனாமி நினைவுகளால் கண்ணீருடன் காணப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in