காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் 31-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் 31-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

வட தமிழக கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் 31-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் நிலவுகிறது. இது இன்று, அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக சற்று வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28, 29 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 30, 31 தேதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.

32 சதவீதம் அதிக மழை: தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த அக்.1-ம் தேதி முதல் நேற்று வரை சராசரியாக 57 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 43 செ.மீ. மழை பதிவாகும். இந்த ஆண்டு வழக்கத்தைவிட 32 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தைவிட 85 சதவீதம் அதிகமாகவும், சென்னையில் 30 சதவீதம் அதிகமாகவும் மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in