

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கக் கோரியும், திமுக அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
வன்னியர்கள் மேல் உள்ள வன்மத்தால் திமுக அரசு உள்இடஒதுக்கீடு வழங்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும், அது மத்திய அரசின் வேலை என்று கூறி தமிழக அரசு தட்டிக்கழிக்கிறது. அரசு ஊழியர்களைக் கொண்டு ஒரே மாதத்தில் கணக்கெடுப்பு நடத்திவிடலாம். சாதிவாரி கணக்கெடுப்பை 3 முறை தடுத்தது திமுகதான்.
திமுகவை வளர்த்தது வன்னியர்கள்தான். தற்போது துரைமுருகன் பொதுச் செயலாளராக உள்ளார். அவர் முதல்வராக இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் துணை முதல்வர் பதவி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது.
எம்ஜிஆர் ஆட்சியில் வன்னியர்களுக்கு 13 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க முடிவெடுத்தார். ஆனால், அவருடன் இருந்தவர்கள் இது தொடர்பான கோப்பை மறைத்துவிட்டனர். தற்போது 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்காக போராடி வருகிறோம். திமுக அரசு இடஒதுக்கீடை கொடுக்காது. வருங்காலங்களில் நாமே அதை எடுத்துக்கொண்டு, பிற சாதியினருக்கும் கொடுப்போம். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.