

விழுப்புரம்: திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையில், பயணிகள் ரயில் 2 மணி நேரம் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், ரயிலில் வந்த பயணிகள் கடும் அவதிஅடைந்தனர்
சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6 மணிக்கு 1,000-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு மெமு ரயில் புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருக்கும்போது, திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் தண்டவாளத்தில் திடீரென அதிகப்படியான சத்தம் கேட்டதால் லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து ரயில்வே ஊழியர்கள் வந்து பார்த்தபோது ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பின், ரயில்வே ஊழியர்கள் விரிசலை சரி செய்தனர்.
இது குறித்து ரயில்வே வட்டாரங்களில் கேட்டபோது, அதிகமான பனி பொழிவின்போது இப்படிப்பட்ட தண்டவாள விரிசல்கள் சாதாரணமாது என்று தெரிவித்தனர். இதையடுத்து பாண்டிச்சேரி ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனால் ரயிலில் வந்த பயணிகள் கடும் அவதிஅடைந்தனர். மேலும் 2 மணி நேரத்திற்கு மேலாக தண்டவாளத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அதேபோல தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் சென்னைக்கு சென்ற திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலதாமதமாக புறப்பட்டு சென்றது.