Published : 21 Jul 2018 03:45 PM
Last Updated : 21 Jul 2018 03:45 PM

தி.நகர் நகைக்கடையில் 1.3 கிலோ தங்க நகைகள் மாயம்: ஊழியர்கள் 2 பேர் கைது

தி.நகரில் நகைக் கடையில் 1.3 கிலோ தங்க நகைகளைத் திருடியதாக அங்கு வேலை செய்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் வசிப்பவர் ஷ்ர்னிக் நாகர் (46). இவர் சொந்தமாக ஜி.என்.செட்டி சாலையில் ஜெ.ஜெ.டைமண்ட் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை கடந்த 3 வருடங்களாக நடத்தி வருகிறார். இவரது கடையில் சவுகார்பேட்டையைச் சேர்ந்த இவரது உறவுக்கார இளைஞர்கள் நிர்மல் கத்தோட் (27), நிதிஷ் கத்தோட் (25) ஆகிய இருவர் பணியாட்களாக உள்ளனர்.

உடன் பிறந்த சகோதரர்களான இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விற்பனைப் பிரிவில் பணியாற்றி வருகின்றனர். நகைக்கடையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஸ்டாக் கணக்கெடுப்பது வழக்கம். அவ்வாறு ஜூன், ஜூலை கணக்கெடுப்பின் போது கடையிலிருந்த நகைகளில் 11 நெக்லஸ், 9 கம்மல், ஒரு செயின் உட்பட நகைகள் மாயமானது தெரியவந்தது.

அவற்றின் மொத்த எடை 1.3 கிலோ ஆகும். நகை குறைந்திருப்பதை 3 நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்த உரிமையாளர் இதுபற்றி பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரில் தனது கடையில் விற்பனையாளர்களாகப் பணியாற்றும் சகோதரர்கள் நிர்மல் கத்தோட், நிதிஷ் கத்தோட் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.

அவரது புகாரின்பேரில் நேற்றிரவு சகோதரர்கள் இருவரையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும், காணாமல் போன நகைகளை தாங்கள் உரிமையாளருக்குத் தெரியாமல் எடுத்ததாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து திருடிய நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x