சவுக்கு சங்கர் மீண்டும் கைது

சவுக்கு சங்கர் மீண்டும் கைது
Updated on
1 min read

சென்னை: தேனி மாவட்டம் பழனிசெட்டிப் பட்டியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஆஜராகாததால், மதுரை போதைப் பொருள்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து போலீஸார், சென்னையில் இருந்த சவுக்கு சங்கரை இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

வீடியோ பரவல்: இதற்கிடையே தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் குறித்து அண்மையில் அவதூறாகப் பேசியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பான புகார் சென்னை காவல்துறைக்கு சென்றது. அந்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸார் சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கரிடம் போலீஸார் நேற்று வழங்கினர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் விரைவில் சவுக்கு சங்கரை, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in