மேட்டூர் அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை நடந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அமைச்சர் ராஜேந்திரன் நிவாரண உதவித்தொகையை வழங்கினார்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை நடந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அமைச்சர் ராஜேந்திரன் நிவாரண உதவித்தொகையை வழங்கினார்.
Updated on
1 min read

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பலியான இருவரது குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சமும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் 5 பேருக்கும் தலா 2 லட்ச ரூபாயும் தமிழக அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சேலம் மாவட்டம், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தின் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேற்று (டிச.19) மாலை நிலக்கரி சுமைப்பான் (Coal Bunker) ஒன்று எதிர்பாராத விதமாகச் சரிந்து விழுந்ததால் அந்த இடத்தில் பணி செய்து கொண்டிருந்த 7 ஒப்பந்தத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் காயமடைந்த ஐந்து பேர் உடனடியாக மீட்கப்பட்டு முதலுதவிக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர். இவ்விபத்தில் சிக்கிய வெங்கடேசன் மற்றும் பழனிசாமி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், தமிழக முதல்வரின் ஆணைப்படி, விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் ரூபாயும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் 5 பேருக்கும் தலா 2 லட்ச ரூபாயும் நிவாரணமாக வழங்கினார். அப்போது மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம் உடனிருந்தார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in