Published : 20 Dec 2024 03:08 PM
Last Updated : 20 Dec 2024 03:08 PM
சேலம் சின்னக்கடை வீதியில் ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வஉசி பூ மார்க்கெட்டை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மார்க்கெட்டை குத்தகைக்கு எடுப்பதில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டியார் ஆதரவாளர்களும் அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆதரவாளர்களும் ஆளுக்கொரு பக்கம் படைதிரட்டினர். இறுதியில், அமைச்சர் ராஜேந்திரன் ஆதரவாளரான லோகேஷ் தரப்புக்கு பூ மார்க்கெட் டெண்டர் சிக்கியது.
இதையடுத்து, வீரபாண்டியார் ஆதரவாளரான பூக்கடை ராஜி தரப்பினர் அமைச்சர் நேருவை தனி ரூட்டில் சந்தித்துப் பேசி அவரது ஆசியுடன், மாநகராட்சிக்கு சொந்தமான விக்டோரியா வணிக வளாகத்தில் போட்டி பூ மார்க்கெட்டை கடந்த 9-ம் தேதி திறந்தனர். இதை வைத்தும் இப்போது சர்ச்சை வெடித்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய லோகேஷ், “புதிதாக கட்டப்பட்ட வஉசி பூ மார்க்கெட்டில் உள்ள 240 கடைகளுக்கு தினசரி வாடகை, பூ மூட்டைகளுக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்க ரூ.9.8 கோடிக்கு டெண்டர் எடுத்துள்ளோம். இந்த டெண்டரை எடுக்க பூக்கடை ராஜியும் மோதினார். ஆனால், அவருக்குக் கிடைக்கவில்லை. அந்த ஆத்திரத்தில் அமைச்சர் நேருவை சந்தித்துப் பேசி அவரது சப்போர்ட்டில் போட்டி பூ மார்க்கெட்டை திறந்து எங்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள்.
வஉசி பூ மார்க்கெட்டில் ராஜி தரப்பினருக்காக 40 கடைகள் ஒதுக்கி வைத்துள்ளோம். ஆனால், அவர்கள் டெண்டர் கைவிட்டுப் போனதைக் கவுரவ பிரச்சினையாக எடுத்துக் கொண்டு இந்த மார்க்கெட்டில் கடை போடாமல் போட்டி பூ மார்க்கெட்டை திறந்துள்ளனர். விக்டோரியா வணிக வளாகத்தில் அழுகும் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று மாநகராட்சியில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால், அதை மீறி அங்கு பூ மார்க்கெட்டை திறந்திருக்கிறார்கள். பூ மூட்டைக்கு எங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதற்கும் மறுத்து வருகிறார்கள். போட்டி பூ மார்க்கெட் திறந்துள்ளதை எதிர்த்து திமுக மண்டலக்குழு தலைவர்கள் தனசேகரன், அசோகன் தலைமையில் கவுன்சிலர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம்” என்றார்.
இதுகுறித்து பூக்கடை ராஜியிடம் கேட்டதற்கு, “எனது தந்தையார் காலத்தில் இருந்து நாங்கள் வீரபாண்டியாரின் ஆதரவாளர்களாக இருக்கிறோம். பாரம்பரிய திமுக-வினரான எங்களுக்கு வஉசி பூ மார்க்கெட்டில் கடை ஒதுக்கித் தரவில்லை. அதனால் நாங்கள் அமைச்சர் நேருவை சந்தித்துப் பேசி, விக்டோரியா வணிக வளாகத்தில் தலா ஒரு கடைக்கு ரூ.5 லட்சம் வீதம் ரூ.3.75 கோடி பணம் கட்டி 75 கடைகளை மாத வாடகைக்கு டெண்டர் எடுத்துள்ளோம்.
அழுகும் பொருட்களை விற்கக்கூடாது என்ற மாநகராட்சி தீர்மானத்தை, நகராட்சி நிர்வாகத்துறையின் முதன்மைச் செயலாளர் ரத்து செய்த பிறகே நாங்கள் அங்கு பூ மார்க்கெட்டை திறந்துள்ளோம். வஉசி பூ மார்க்கெட்டும் விக்டோரியா வணிக வளாகமும் நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் வருவதால், துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கடைகளை பெற்றோம். இந்த விஷயத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர ராஜேந்திரனை அணுக வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்படவில்லை. மற்றபடி இதில் வேறெந்த அரசியலும் இல்லை” என்றார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த திமுக-வைச் சேர்ந்த பூ வியாபாரியான செந்தில்குமார், “வஉசி பூ மார்க்கெட் விவகாரத்தில் திமுக-வினரே இரு பிரிவாக நின்று மோதிக்கொள்வது அத்தனை ஆரோக்கியமில்லை. ஒரே ஊரில் இரண்டு பூ மார்க்கெட் இயங்கினால் விவசாயிகளுக்கும், பூ வியாபாரிகளுக்கும் இடையில் வீண் குழப்பம் தான் மிஞ்சும்” என்றார். ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதைப் போல் இங்கே பூ மார்க்கெட் ரெண்டுபட்டதால் ஆளும் கட்சியினர் திண்டாட்டத்தில் இருக்கிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT