Published : 22 Jul 2018 10:16 AM
Last Updated : 22 Jul 2018 10:16 AM

சென்னைக் கடற்கரை அருகே சிக்னல் கோளாறு: மின்சார ரயில்களின் சேவை 3 மணி நேரம் பாதிப்பு: மாணவர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் கடும் அவதி

சென்னை கடற்கரை அருகே நேற்று சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் வேளச்சேரி மற்றும் தாம்பரம் மின்சார ரயில்களின் சேவையில் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை கடற்கரை ரயில்நிலையம் அருகே நேற்று காலை 9.50 மணி அளவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்னல் செயல்படாமல் இருந்தது. இதனால், கடற்கரைக்கு வரவேண்டிய தாம்பரம், செங்கல் பட்டு மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதேபோல், வேளச்சேரியில் இருந்து கிளம்பிய மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இளைஞர்கள் சிலர் ரயில்களில் இருந்து இறங்கி நடந்து சென்றனர். ஆனால், பெண்கள், முதியோர் வேறுவழியின்றி ரயில்களிலேயே மணிக்கணக்கில் காத்திருந்தனர். அதன்பிறகு, தாம்பரம் மின்சார ரயில்கள் பூங்கா ரயில் நிலையம் வரையில் இயக்கப்பட்டன.

திருவள்ளூர், ஆவடியில் இருந்து கடற்கரைக்குச் செல்ல வேண்டிய மின்சார ரயில் சென்ட்ரலுக்கு மாற்றிவிடப்பட்டன. காலை 9.50 மணிக்கு செயலிழந்த சிக்னல்கள் மதியம் 1 மணிக்கு பிறகே சீரானது. அதன்பின்னர், மின்சார ரயில்சேவை சீராகத் தொடங்கியது. இதனால், சுமார் 3 மணிநேரம் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, மாம்பலம், மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘தாம்பரம் தடத்தில் காலை 10 மணி அளவில் திடீரென மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மதியம் 12.30 மணி வரையிலும் இதே நிலை நீடித்தது. பிறகு, ரயிலில் இருந்து இறங்கி ஆட்டோக்களில் பயணம் செய்தோம். வயதானவர்கள், குழந்தைகளோடு இருந்த பெண்கள் வேறுவழியின்றி மின்சார ரயில்களிலேயே காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்றனர்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கடற்கரை ரயில் நிலையம் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறிவித்ததும், பயணிகளுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன.

பிறகு, ரயில் நிலையங்களிலும் ஊழியர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடற்கரைக்குச் செல்ல வேண்டிய ரயில்கள் பார்க் ரயில் நிலையத்திலும், வேளச்சேரியில் இருந்து வரும் ரயில்கள் கோட்டை அருகேயும் நிறுத்தி இயக்கப்பட்டன. மதியம் 12.45 மணிக்குப் பிறகே படிப்படி யாக மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x