Published : 21 Jul 2018 12:17 PM
Last Updated : 21 Jul 2018 12:17 PM

மக்களவையில் மத்திய அரசை ஆதரித்து வாக்களித்தது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வாக்களித்தது என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “விவசாய விளைபொருட்கள் மீது எந்த விதத்திலும் கூடுதல் வரி விதிக்கக் கூடாது என இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தப்படும். விவசாய விளைபொருட்களில் சில பொருட்கள் மீது 1 சதவீத வரி விதிக்கப்படுவதற்கு தமிழக அரசு ஏற்கெனவே கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தப்படும்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை  எதிர்த்து அதிமுக வாக்களித்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது தெலுங்கு தேசம் கட்சி.

அவர்களின் பிரச்சினைக்குத்தான் வந்தார்கள். எந்த மாநிலத்துக்கும் பிரத்யேக அந்தஸ்து வழங்கக் கூடாது, அப்படி வழங்கினால் நம் மாநிலம் பாதிக்கும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அன்றைக்கும் இதனை எதிர்த்தோம். அதன் அடிப்படையில் தான் இன்றைக்கும் எதிர்த்தோம்” என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x