அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: முதல்வரின் தனிச்செயலர் சிகிச்சை பலனின்றி பலி

தமிழ் அரிமா
தமிழ் அரிமா
Updated on
1 min read

புதுச்சேரி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்து சிகிச்சையிலிருந்த முதல்வரின் உதவி தனிச்செயலர் இன்று உயிரிழந்தார்.

புதுவை மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ் அரிமா (வயது 34). இவர் முதல்வர் ரங்கசாமியின் உதவி தனி செயலராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் காலாப்பட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து சின்னகாலாப்பட்டு இசிஆர் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கீழே விழுந்துள்ளார்.

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கனக செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அவரது உடல் நாளை காலை 10 மணிக்கு பவழக்காரன் சாவடி சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in